search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி தேவஸ்தான உதவி அதிகாரி"

    திருப்பதி தேவஸ்தான உதவி அதிகாரியான சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியரின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். #TirupathiDevasthanam
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் அலுவலக உதவியாளராக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். அவர், ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் உள்ளன.

    பெண் ஊழியரின் மகளுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் உள்ளான். அந்த மகள் தனது கணவரை விட்டு பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். பெண் ஊழியர் தனது அடுத்த வாரிசாக மகளை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்ப்பதற்கான ஆவணங்களுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    மகள் பெயரை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி, திருப்பதி தேவஸ்தான உதவி அதிகாரி சீனிவாஸ் என்பவர், பெண் ஊழியரின் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி பெண் ஊழியர், திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கரிடம் புகார் செய்தார். இதுபற்றி அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெண் ஊழியரின் மகள் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் தேவஸ்தான உதவி அதிகாரி சீனிவாஸ் மீது புகார் செய்தார்.

    இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எனது கணவரை விட்டு பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறேன். எனக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். மகன் நோயால் அவதிப்பட்டு வருகிறான். எனது தாயாருக்குப் பிறகு வாரிசுதாரராக என்னுடைய பெயரை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் எனச் சில ஆவணங்களை வைத்திருந்தேன்.

    அந்த ஆவணங்களை ஏற்க வேண்டும் என்றால், உதவி அதிகாரி சீனிவாஸ் என்பவர் 2 நாட்கள் தனியாக என்னுடன் வசிக்க வேண்டும் எனக் கூறி தினமும் எனக்கு போன் செய்தும், வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச படங்களை அனுப்பி வைத்தும் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார்.

    எனது ஆசைக்கு இணங்கினால் உனது தாயாருக்கு மருத்துவ ரீதியாக வேலை செய்வதற்கான தகுதியை இழந்து விட்டதாக கூறி, ஒரு அரசு டாக்டர் மூலமாக மருத்துவ சான்றிதழ் பெற்றுத் தருவதாகவும், எனக்கு தாயாரின் வேலையை நேரடியாக வாங்கித் தருவதாகவும், வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார்.

    இதுபற்றி தனது தாயார், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கரிடம் புகார் செய்துள்ளார். அவர், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, சந்திரகிரி போலீசார் ஆகியோர் தேவஸ்தான உதவி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TirupathiDevasthanam
    ×